Last Updated : 30 Oct, 2020 03:51 PM

 

Published : 30 Oct 2020 03:51 PM
Last Updated : 30 Oct 2020 03:51 PM

அரசு ஊழியர்கள் கட்டுரை, புத்தகங்கள் எழுத தடை; தொலைக்காட்சி, சினிமாக்களில் பங்கேற்கவும் கூடாது: கர்நாடகா அரசு புதிய சட்டம்

பெங்களூரு 

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் நடிக்கவோ பங்கேற்கவோ கர்நாடக அரசு தடை விதித்து சட்டம் கொண்டு வருகிறது.

கர்நாடக அரசு வெளியிடடுள்ள கர்நாடக மாநில சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகள் 2020 என்ற வரைவில், கர்நாடக அரசு அரசு ஊழியர்கள் செய்ய அனுமதிக்கப்படுபவை, செய்யக்கூடாதவை என சில சட்ட விதிகளை வரையறுத்துள்ளது.

இதற்கான அரசிதழின் வரைவு அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவற்றை நன்கு படித்தபிறகு மக்கள் தங்கள் பரிந்துரைகளையும் ஆட்சேபனைகளையும் சமர்ப்பிக்க அரசு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. அது இறுதி செய்யப்பட்டவுடன், அது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

பத்திரிகை, வானொலி அல்லது தொலைக்காட்சி, எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் அல்லது வெகுஜன ஊடகங்களிலும் பங்கேற்பது அல்லது புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

திரைப்படங்கள், சீரியல்களில் நடிக்கக்கூடாது

தகுதிவாய்ந்த உயர் அதிகாரியால் அனுமதிக்கப்படாதபட்சத்தில் எந்தவொரு அரசாங்க ஊழியரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கக்கூடாது.

அரசு ஊழியர் வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் ஸ்பான்சர்கள் வழங்கும் ஊடக நிகழ்ச்சியிலோ அல்லது அரசாங்க ஊடகங்களால் நியமிக்கப்பட்ட ஒரு ஊடக நிகழ்ச்சியிலோ வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கக்கூடாது.

புத்தகங்கள் எழுதத் தடை

தகுதிவாய்ந்த உயர் அதிகாரியின் முன் அனுமதி கிடைக்காத பட்சத்தில், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சொந்தமாகவோ எந்தவொரு நாளிதழ் அல்லது குறிப்பிட்ட கால வெளியீட்டின் (வார, மாத இதழ்கள்) எடிட்டிங் அல்லது நிர்வாகத்தை ஒரு அரசாங்க ஊழியர் நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கக் கூடாது.

எந்தவொரு அரசு ஊழியரும் தங்கள் அலுவலகப் பணிகளை மீறி புத்தகத்தையும் வெளியிடுவது அல்லது எந்தவொரு இலக்கிய அல்லது கலை அல்லது விஞ்ஞான வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும், எந்தவொரு உயர் அதிகாரியின் முன் அனுமதியைப் பெறாமல் எப்போதாவது இலக்கியம், நாடகம், கட்டுரைகள், கவிதை, சிறுகதைகள், நாவல்கள் அல்லது புனைகதை பற்றிய புத்தகங்களை வெளியிட்டுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அவ்வாறு வெளியிடப்படும் கட்டுரைகள் அல்லது புத்தகங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக அந்த அதிகாரி தனது நேரத்தையும் உத்தியோகபூர்வ நிலையையும் பயன்படுத்தக்கூடாது, மேலும் அத்தகைய வெளியீட்டில் அரசாங்கத்தின் எந்தவொரு கொள்கைகளை விமர்சிக்கும் ஆட்சேபகரமான விஷயமும் கருத்துக்களும் இருக்கக்கூடாது.

பரிசுப் பொருட்கள் பெறக் கூடாது

பரிசுகளைப் பொறுத்தவரை, எந்தவொரு அரசு ஊழியரும் தனது குடும்பத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது அனுமதிக்கவோ கூடாது, அல்லது அவர் சார்பாக செயல்படும் வேறு எந்த நபரும் எந்தவொரு பரிசையும் ஏற்க அனுமதிக்கக்கூடாது.

பரிசுகளில் இன்னொருவகையாக, நெருங்கிய உறவினர் அல்லது தனிப்பட்ட நண்பர்கள் அல்லாத வேறு எந்த நபரும் வழங்கக்கூடிய, இலவச போக்குவரத்து, போர்டிங், உறைவிடம் அல்லது பிற சேவை போன்றவை அரசாங்க ஊழியருடன் உத்தியோக பூர்வமான காரணங்களுக்காக வழங்கக் கூடிய எந்த ஒரு சேவையும் இதில் அடங்கும்.

மேலும், உத்தியோகபூர்வ பரிவர்த்தனைகளைக் கொண்ட எந்தவொரு நபரிடமிருந்தும் ஆடம்பரமான விருந்தோம்பல் பெற்றுக்கொள்வதையோ அடிக்கடி விருந்தோம்பல் செய்வதையோ தவிர்க்குமாறு வரைவு விதி பரிந்துரைக்கிறது.

இவ்வாறு கர்நாடக அரசின் வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x