Published : 07 Oct 2015 12:18 PM
Last Updated : 07 Oct 2015 12:18 PM
*
ஜம்மு - காஷ்மீரின் சர்வதேச எல்லையில் தடுப்புச் சுவரை ஏற்படுத்த ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், ராணுவத்துக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், பிரதமர் அலுவலகம் இறுதி முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் 179 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயரமான தடுப்பை ஏற்படுத்தும் முடிவுக்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், 'தி இந்து' (ஆங்கிலம்) விடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின், எல்லையில் தடுப்பை எழுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இரட்டை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் தடுப்பை எழுப்பும் முடிவுக்கு அப்போதைய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்காக அங்கு சுமார் 20 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டது.
சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ராணுவ தளபது தல்பீர் சிங் இடையேயான சந்திப்பில், இந்த முடிவை மத்திய அரசு முழு மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.
"அவசர காலத்தில் எல்லையில் எழுப்ப திட்டமிடப்பட்டிருக்கும் தடுப்பு, ராணுவத்தின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருக்கும். ஏற்கெனவே, சர்வதேச எல்லை அருகே இருக்கும் தடுப்பை மீறிதான் ராணுவம் தாக்குதல்களை நடத்துகிறது. புதிய தடுப்பால் உரிய ராணுவ நடிக்கைகளை மேற்கொள்வதிலும், பதிலடி தாக்குதல் நடத்துவதிலும் சிரமம் ஏற்படும்" என்று ராணுவம் கருதுவதாக, அந்த உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை எதற்காக செயல்படுத்த வேண்டுமென்று உள்துறை அமைச்சகம் முழு அறிக்கையை வழங்க வேண்டும் என்று ராணுவம் கோரியுள்ளது. இந்த முரண்பாடுகள் காரணமாக, இந்த திட்டம் குறித்த இறுதி முடிவு, பிரதமர் அலுவலகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச எல்லைத் தடுப்பு 41 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் உயரத்துக்கு 118 கிராமங்களை சுற்றிலும் கத்துவா, சம்பா, ஜம்மு ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த மே 2014 முதல் ஜம்மு நிலைகள் மீது 589 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறலும், 95 முறை தீவிரவாதிகளின் ஊடுருவலும் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தானும் எதிர்ப்பு
இதேப் பிரச்சினையை சமீபத்தில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தான் எழுப்பியது. சர்வதேச எல்லையில் இந்தியா 'சுவர்' எழுப்ப முயற்சிப்பதாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீலா லோதி கடிதம் அனுப்பினார்.
அதில், "சர்வதேச எல்லையில் இந்தியா தடுப்புச் சுவரைக் கட்டி வருகிறது. இது ஐ.நா. சபை ஏற்கெனவே நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரானது'' என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT