பிஹார் தேர்தலில் ஆறு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது ஒவைஸியின் கட்சி

பிஹார் தேர்தலில் ஆறு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது ஒவைஸியின் கட்சி
Updated on
1 min read

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முஸ்லீம் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ் ஏ இத்தஹாதூல் முஸ்லீமின், பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆறு இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இம் மாநிலத்தில் முதன் முறையாக தம் வேட்பாளர்களை 24 இடங்களில் நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது.

இக் கட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வெளியே முதன்முறையாக மகராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடந்த வருடம் போட்டியிட்டது. அதில், இரண்டு தொகுதிகளில் வெற்று பெற்றவர்கள், மூன்றில் மிகக் குறைந்த வாக்குகளில் இரண்டாம் இடம் பெற்றனர். இதை அடுத்து டெல்லியில் போட்டியிட திட்டமிட்டவர்கள், கடைசிநேரத்தில் பின் வாங்கினர்.

இதற்கு, பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக அதன் எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து விடும் எனக் காரணம் கூறப்பட்டது. இதை அடுத்து பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் 24 தொகுதிகளில் தம் வேட்பாளர்களை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கும் அக் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத் தொகுதி எம்பியான அசாத்துத்தீன் உவைஸி மீது, முஸ்லீம் வாக்குகளை பிரிக்க முயல்வதாக புகார் எழுந்திருந்தது. எனவே, பிஹாரில் வெறும் ஆறு கட்சிகளில் போட்டியிடுவதாக நேற்று அறிவித்துள்ளது.

பிஹாரில் முஸ்லீம் அதிகமாக வாழும் பகுதியான சீமாஞ்சல் பகுதியில் கோச்சா தாமன், ராணி கன்ச், கிஷண் கன்ச், பைஸி, அமௌர் மற்றும் பல்ராம்பூர் ஆகிய தொகுதிகளில் உவைஸியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிஹாரில் 16.5 சதவிகித முஸ்லீம்கள்

இருப்பதாகக் கருதப்படும் பீஹாரின் சீமாஞ்சால் பகுதியில் 40 முதல் 60 சதவிகித முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in