

பயங்கரவாத நிதியுடன் சம்பந்தப்பட்டுள்ள வழக்கில் ஒரு டிரஸ்ட் உட்பட சில என்ஜிஓக்களையும் கண்டுபிடிக்க இன்று தேசிய புலனாய்வு அமைப்பு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
ஸ்ரீநகரில் சில டிரஸ்ட்கள் மற்றும் என்ஜிஓக்களுக்கு பயங்கரவாத அமைப்புகள் நிதி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்குத் தகவல்கள் கிடைத்தன. இவ்வழக்கில் புதிய விசாரணைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனை அடுத்து ஒரு செய்தித்தாளுக்குச் சொந்தமான அறக்கட்டளை உட்பட சில அரசு சாரா நிறுவனங்களைக் (என்ஜிஓக்கள்) கண்டுபிடிக்க இன்று தேசிய புலனாய்வு அமைப்பு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு புதன்கிழமை ஒன்பது இடங்களில் தனது தேடல்களை மேற்கொண்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
''என்ஐஏவின் தேடுதல் வேட்டை புதன்கிழமை காலை தொடங்கியது. உள்ளூர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை ஆகியவற்றின் உதவியுடன் தேசிய புலனாய்வு அமைப்புக் (என்ஐஏ) குழு ஸ்ரீநகரில் இயங்கிவரும் ஒரு முக்கிய ஆங்கில நாளிதழின் வளாகத்தில் அமைந்துள்ள அறக்கட்டளை (டிரஸ்ட்) ஒன்றின் அலுவலகத்தைத் தேடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நிதியுதவி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மூன்று அரசு சாரா அமைப்புகளும் (என்ஜிஓக்கள்) என்ஐஏவால் சோதனை செய்யப்பட்டன.
இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) வெளிப்படுத்தப்படாத நன்கொடையாளர்களிடமிருந்து பணம் பெற்று வருகின்றன. அவை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது''.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.