

ஸ்ரீநகர்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் சண்டை ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பத்காம் மாவட்டத்தின் சதூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததை யொட்டி பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) 7 மணியளவில் உள்ள சதூரா பகுதியில் அமைந்துள்ள மோச்வா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்கத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் இந்த தேடல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது.
இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இரு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட போராளிகளின் அடையாளம் மற்றும் எந்த தீவிரவாதக்குழுவைச் சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு தீவிரவாதி என்று தெரியவந்துள்ளது.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.