Published : 09 Oct 2015 10:38 AM
Last Updated : 09 Oct 2015 10:38 AM

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2 பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

நடப்பாண்டில் 2 பிரம்மோற் சவங்கள் நடைபெறுகின்றன.வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி 2-4ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக தேவஸ் தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தசரா விடுமுறை காலத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால், அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், போதுமான லட்டு பிரசாதங்கள் இருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசனம், தங்கும் அறைகள், போக்குவரத்து, குடிநீர், இலவச அன்ன பிரசாதம், முடி காணிக்கை, சுகாதாரம், உள்ளிட்ட ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் துரிதப் படுத்தியுள்ளனர்.

திருப்பதி, திருமலையில் அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்றம் நடைபெறும். ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு கொடியேற்ற நிகழ்ச்சி கிடையாது. அதேபோன்று, தேரோட்டமும் நடத்தப்பட மாட்டாது. தங்க தேரோட்டம் மட்டும் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x