Published : 27 Oct 2020 05:34 PM
Last Updated : 27 Oct 2020 05:34 PM

கரோனா; நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு 

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளுடன் அமலில் உள்ள பொது முடக்கத்தை நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடு முழுவதும் மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

பின்னர் இந்த ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் அக்டோபர் 15-ம் தேதி முதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை அக்டோபர் 15-ம் தேதி முதல் திறக்கவும் மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்தது.

இதுதவிர பள்ளி, கல்வி நிறுவனங்கள், விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்களை பகுதி வாரியாகத் திறப்பது குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என அறிவித்தது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் பொழுது போக்கு நடவடிக்கைகள் முதல் பள்ளிகள் வரை அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப மீண்டும் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த 5-ம் கட்டத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 6-ம் கட்டத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அதன்படி, தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள அனைத்துத் தளர்வுகளும் தொடர்கின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. திரையரங்கம் மற்றும் பொழுதுபோக்குப் பகுதிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கெனவே கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. எனவே இந்த அனுமதி மாற்றமின்றி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் வாகனங்கள் சென்றுவர எந்த வித இ-பாஸ் அல்லது அனுமதி தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x