Published : 27 Oct 2020 07:21 AM
Last Updated : 27 Oct 2020 07:21 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன முறை மீண்டும் தொடக்கம்

திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோயில் இலவச தரிசனத்துக்கான டிக்கெட் விநியோகம் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 82 நாட்கள் கழித்து சில நிபந்தனைகளுடன் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தினமும் குறைவான பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் மற்றும் இலவச தரிசனம் மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பதியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது.

தற்போது தினமும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை ஆன்லைன் மூலம் பெற்ற 16 ஆயிரம் பக்தர்களும், விஐபி பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், வாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 வழங்கினால் பெறும் டிக்கெட் மூலமாகவும் மட்டுமே சுவாமியை தரிசிக்க முடிகிறது. அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில் அனுமதிக்கும் பக்தர்கள் என மொத்தம் 22 ஆயிரம் பேர் தினமும் சுவாமியை தரிசித்து வந்தனர்.

இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க பணம் இருந்தால்தான் முடியுமா? எனும் கேள்வி பரவலாக எழுந்தது. கரோனா பரவல் காரணமாக தர்ம தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் இந்த விமர்சனத்தை தேவஸ்தான அதிகாரிகள் எதிர்கொண்டு வந்தனர். தற்போது, இரு பிரம்மோற்சவ விழாக்களும் நிறைவடைந்த நிலையில், தர்ம தரிசனம் பிரச்சினை மீண்டும் எழுந்தது. இதனால், தினமும் 3 ஆயிரம் பேருக்கு தர்ம தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பேரில் நேற்று அதிகாலை 5 மணி முதல் திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் தர்ம தரிசனத்துக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதைப் பெற பக்தர்கள் இரவிலிருந்தே இடைவெளி விட்டு காத்திருந்தனர். நேற்று இந்த டோக்கனை வாங்கிய பக்தர்கள், இன்று சுவாமியை தரிசிக்க உள்ளனர். படிப்படியாக இந்த தர்ம தரிசன டோக்கனை அதிகரிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x