Published : 26 Oct 2020 08:23 PM
Last Updated : 26 Oct 2020 08:23 PM

லாலு பிரசாத் யாதவ் காலத்தில் நடந்த ஊழல்கள் பற்றி பேசத் தயாரா? - தேஜஸ்விக்கு கிரிராஜ் சிங் சவால்

பிஹார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடந்த ஊழல்கள் பற்றி பேசத் தயாரா என தேஜஸ்வி யாதவுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.

பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

பாஜக தலைமைக்கு எதிரான கூட்டணிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ராகோபூர் தொகுதியில் போட்டியி்டடு தேஜஸ்வி யாதவ் வென்றார்.அதே தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுகிறார்.

ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவை எதிர்த்து பாஜக சார்பில் சதீக் குமார் போட்டியிடுகிறார். அம்மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

தேஜஸ்வி யாதவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பிரச்சாரத்தில் பாஜகவையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிாஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘பிஹார் தேர்தலையொட்டி ஏராளமான வாக்குறுதிகளை தேஜஸ்வி யாதவ் கொடுக்கிறார். ஆனால் அவரது கட்சி மாநிலத்திலும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் இருந்தபோது ஏன் செய்யவில்லை. இப்போது செய்ய முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை திசை திருப்புகிறார்.

மற்றவர்கள் ஊழல் செய்ததாக கூறும் அவர் தனது தந்தையின் காலத்தில் நடந்த ஊழல்கள் பற்றியும், ஊழலுக்காக அவர் தண்டிக்கப்பட்டது பற்றியும் வாய் திறக்க மறுக்கிறார். இதுகுறித்து பேசத் தயாரா.’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x