Last Updated : 26 Oct, 2020 12:03 PM

 

Published : 26 Oct 2020 12:03 PM
Last Updated : 26 Oct 2020 12:03 PM

இந்தியாவில் 108 நாட்களுக்குப் பின் கரோனா உயிரிழப்பு 500-க்குக் கீழ் குறைந்தது: 50 ஆயிரத்துக்கும் குறைவாக நோய்த்தொற்று

கோப்புப் படம்.

புதுடெல்லி

இந்தியாவில் 108 நாட்களுக்குப் பின் கரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் முதல் முறையாகக் குறைந்துள்ளது. அதேபோல், புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 50 ஆயிரத்துக்கும் கீழ் இம்மாதத்தில் 2-வது முறையாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 148 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மாதத்தில் 2-வது முறையாக கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 79 லட்சத்து 9 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஊக்கம் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 71 லட்சத்து 37 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 90.23 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 53 ஆயிரத்து 717 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8.26 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 4-வது நாளாக கரோனா வைரஸால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 480 பேர் உயிரிழந்தனர். 108 நாட்களுக்குப் பின் கரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை 500க்கும் கீழ் முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 112 பேரும், கர்நாடகாவில் 32 பேரும், மேற்கு வங்கத்தில் 60 பேரும், தமிழகத்தில் 31 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 28 பேரும், டெல்லியில் 33 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 10 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரத்து 778 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 39 ஆயிரத்து 309 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x