Published : 25 Oct 2020 06:42 PM
Last Updated : 25 Oct 2020 06:42 PM

வாழ்க்கைப் பாதையைக் துலக்கிக் காட்டும் ஒரு வழிகாட்டி திருக்குறள்: மனதின் குரலில் விதந்தோதிய பிரதமர் மோடி

இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலி உரையாற்றிய பிரதமர் மோடி நூல் வாசிப்பு, நூலகம் ஆகியவற்றின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசியதோடு திருக்குறளையும் விதந்தோதினார்.

இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த முடிதிருத்தும் கடைக்காரரின் சலூனிலேயே நூலக முயற்சியைப் பாராட்டி பேசினார்.

மோடி பேசும்போது, “கற்றலே வளர்ச்சி என்பார்கள். இன்று மனதின் குரலில் ஒரு விசித்திரமான தாகம் இருக்கும் ஒரு நபரை உங்களுக்கு நான் அறிமுகம் செய்ய இருக்கிறேன். படித்தல்-கற்றல் ஆகியவற்றில் இருக்கும் சந்தோஷங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாகம் இது. இவர் தான் பொன். மாரியப்பன் அவர்கள். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். தூத்துக்குடி முத்துக்களின் நகரம் என்று அறியப்படுகிறது.

ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்களின் மகத்துவம் வாய்ந்த மையமாக இது இருந்தது. இங்கே வசித்துவரும் என்னுடைய நண்பரான பொன் மாரியப்பன் அவர்கள் முடிதிருத்தும் தொழிலைச் செய்து வருகிறார், ஒரு சலூன்கடை நடத்தி வருகிறார். மிகவும் சிறிய சலூன்கடை தான் அது. அதிலே அவர் விசித்திரமான, உத்வேகம்தரும் ஒரு பணியைச் செய்திருக்கிறார். தனது சலூன்கடையின் ஒரு பாகத்தில் அவர் நூலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சலூன்கடைக்கு வருபவர் தனது முறைவரும் வரை காத்திருக்கும் போது, அங்கே ஒரு புத்தகத்தைப் படிக்கிறார், படித்தவை பற்றி எழுதுகிறார் என்றால், பொன். மாரியப்பன் அவர்கள் அந்த வாடிக்கையாளருக்கு ஒரு தள்ளுபடி அளிக்கிறார். சுவாரசியமாக இருக்கிறது இல்லையா!! வாருங்கள், தூத்துக்குடி செல்வோம், பொன். மாரியப்பன் அவர்களோடு உரையாடுவோம்” என்றார்

உரையாடல்:

பிரதமர்: பொன். மாரியப்பன் அவர்களே, வணக்கம். நல்லா இருக்கீங்களா?

பொன் மாரியப்பன்: பெருமதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, வணக்கம்.

பிரதமர்: வணக்கம், வணக்கம்…. உங்களுக்கு இந்த நூலகம் பற்றிய எண்ணம் எபப்டி ஏற்பட்டது?

பொன் மாரியப்பன்: நான் 8ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். என் குடும்பச் சூழ்நிலை காரணமாக என்னால் மேலே படிக்க முடியவில்லை. படித்தவர்களைப் பார்க்கும் போது, என்னால் படிக்க முடியவில்லையே என் மனதிலே என்ற குறை தோன்றும். ஆகையால் நாம் ஏன் ஒரு நூலகத்தை ஏற்படுத்தி, அதனால் பலரும் பலனடையச் செய்யக்கூடாது என்று தோன்றியது, இதுவே எனக்கு உத்வேகம் அளித்தது.

பிரதமர்: உங்களுக்கு எந்தப் புத்தகம் பிடிக்கும்?

பொன் மாரியப்பன்: எனக்குத் திருக்குறள் மிகவும் பிடிக்கும் ஐயா.

பிரதமர்: உங்களோடு பேசியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நல்வாழ்த்துக்கள்.

பொன் மாரியப்பன்: மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, உங்களோடு பேசியது எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

பிரதமர்: நல்வாழ்த்துக்கள்.

பொன் மாரியப்பன்: மிக்க நன்றி ஐயா.

பிரதமர்: தேங்க்யூ.

நாம் இப்போது பொன் மாரியப்பன் அவர்களோடு உரையாற்றினோம். பாருங்கள், எப்படியெல்லாம் அவர் மக்களின் முடியை அழகு செய்வதோடு கூடவே, அவர்களின் வாழ்க்கையையும் அழகுபார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்! திருக்குறள் மீது மக்கள் மனங்களில் இருக்கும் பிரியத்தைப் பற்றிக் கேள்விப்படும் போது மிகவும் நன்றாக இருக்கிறது. திருக்குறள் அனைவரையும் கவர்ந்திருப்பதைப் பற்றி நீங்கள் அனைவருமே கேட்டீர்கள். இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் திருக்குறள் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இதைப் படித்துப் பாருங்கள். ஒருவகையில் வாழ்க்கைப் பாதையைக் குறள் துலக்கிக் காட்டும் ஒரு வழிகாட்டி, என்று பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x