Published : 25 Oct 2020 06:02 PM
Last Updated : 25 Oct 2020 06:02 PM

கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி செலுத்தியவர்களுக்கு கூடுதல் வட்டித் தொகை நவம்.5ம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்று தவணையை முறையாக வட்டிக்கு வட்டியுடன் செலுத்தியவர்களுக்கு கூட்டுவட்டி, சாதாரண வட்டிக்கு இடையிலான வேறுபாட்டை கணக்கிட்டு, கூடுதல் வட்டித் தொகை நவம்பர் 5-ம் தேதிக்குள் அவர்களின் வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் நிதிநெருக்கடியில் சிக்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டித் தொகை திருப்பிச் செலுத்தப்படும்போது அவர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும்.

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது அதில், “பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி வங்கிகளில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு கரோனா காலத்தில் ஒத்திவைப்புச் சலுகையைப் பெற்றிருந்தால் அவர்கள் செலுத்தும் வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. இந்தத் திட்டம் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தத் திட்டத்தில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெறும் வங்கிக் கணக்கு உடையவர்களின் கணக்கு பிப்ரவரி 29-ம் தேதிவரை என்பிஏ அதாவது வாராக்கடன் வங்கிக் கணக்காக இருந்திருக்கக்கூடாது.

இந்தத் திட்டத்தில் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், நபார்டு வங்கிகள், வீட்டு வசதி வங்கிகள், வீடு கட்ட கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கடன் பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

கரோனா காலத்தில் அதாவது மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடன் தவணையைக் கூட்டுவட்டியுடன் செலுத்தியவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்

அதேசமயம், கடன் ஒத்திவைப்புச் சலுகையைப் பெறாமல், கடன் தவணையைக் கரோனா காலத்திலும் முறையாக வட்டிக்கு வட்டித் தொகையைச் செலுத்தியவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் வட்டித்தொகை திரும்பச் செலுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “ கரோனா காலத்தில் கடன் தவணை ஒத்திவைப்பு தி்ட்டத்தில் சேராமல் கூட்டுவட்டியைச் சேர்த்து மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31ம் தேதிவரை தவணையைச் செலுத்திய கணக்குதாரர்களுக்கு கூட்டுவட்டி, சாதாரண வட்டி இடையிலான வேறுபாட்டை கணக்கிட்டு அந்த கூடுதல் தொகையை வங்கிக்கணக்கில் சேர்க்க அனைத்து கடன் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வேறுபாட்டுத் தொகை நவம்பர் 5-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கு தாரர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.

ரிசர்வ் வங்கி மார்ச் 27,மே 23ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கைகள் படி இணையாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்கள் முழுமையாகப் கடன் ஒத்திவைப்பு செலுகையை பெற்றிருக்கிறார்களா அல்லது ஓரளவு பெற்றிருக்கிறார்களா அல்லது தவணைகளை செலுத்துவதில் தடை இருக்கிறதா, அல்லது கடன் ஒத்திவைப்பு சலுகைையப் பெறவில்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் கூடுதல் வட்டித்தொகை திருப்பிச் செலுத்தப்படும்

வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறுவார்கள் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x