Last Updated : 25 Oct, 2020 02:04 PM

 

Published : 25 Oct 2020 02:04 PM
Last Updated : 25 Oct 2020 02:04 PM

பண்டிகைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள்;உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் காலத்தில் பண்டிகைகளை மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன், விழிப்புடன் கொண்டாட வேண்டும். மக்கள் பண்டிகைகளுக்கு ஷாப்பிங் செல்லும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வாங்க வேண்டும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 69-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

இன்று நாடுமுழுவதும் விஜயதசமி பண்டிகை(தசரா) கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் அனைத்து மக்களுக்கும் நான் தசாரா பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். தசரா பண்டிகை என்பது பொய்மையை வென்ற உண்மையின் கொண்டாட்டமாகும்.

அதேநேரம், பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களுக்கு மத்தியில் நாம் பொறுமையாக இருந்ததன் வெற்றியையும் இந்த தசரா குறிக்கிறது. இன்று அனைத்து மக்களும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்கிறீர்கள், அடக்கமாக பண்டிகைகளை கொண்டாடுகிறீர்கள். கரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நாம் ஏறக்குறைய வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

முன்பெல்லாம், துர்கா பூஜையின் போது ஏராளமான மக்கள் சென்று துர்கா சிலை வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்வார்கள். அது வழக்கமான நிகழ்வாக இருந்தது.ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை.

தசரா பண்டிகையையொட்டி முன்பு, மிகப்பெரிய கண்காட்சி, பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால்,இந்த முறை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. ராம லீலா பண்டிகை கூட மிகப்பெரிய மக்கள் கூட்டத்தைக் கொண்டது அதைக் காண்பதற்கும் இந்த முறை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த முறை மக்கள் கூட்டமாகத் திரளும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈத், ஷரத் பூர்ணிமா, வால்மீகி ஜெயந்தி, தான்தேஸ்ராஸ், தீபாவளி, சாத் பூஜை, குருநானக் ஜெயந்தி போன்ற பண்டிகைகள் அடுத்து வர இருக்கின்றன. கரோனா காலத்தில் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.

பண்டிகை காலம் என்றாலே மக்கள் உற்சாகத்தில், மகிழ்ச்சியில்அதிகமான பொருட்களை வாங்குவார்கள். இந்த முறை மக்கள் மனதில் ஒன்றை நினைவில் வைத்து ஷாப்பிங் செல்லும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வாங்க வேண்டும்.

கரோனா காலத்தில் நம்முடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்த நேரத்தில் நமக்குத் துணையாக இருந்தவர்கள், சமூகத்துக்கு துணையாக இருந்தவர்களை பண்டிகை நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

துப்புரவு தொழிலாளர்கள், வீட்டுக் காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர் கரோனா காலத்தில் நமக்கு துணையாக எண்ணற்ற உதவிகளைச் செய்தார்கள். அவர்களோடு சேர்ந்த பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.

நாம் நம்முடைய துணிச்சல் மிக்க எல்லையில் காவல் காக்கும் வீரர்களை இந்தப் பண்டிகை காலத்தில் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் வீடுகளில் விளக்கு ஏற்றி அவர்களை பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x