Published : 03 May 2014 03:23 PM
Last Updated : 03 May 2014 03:23 PM

கிரிராஜ் முன்ஜாமீன் மனுவை தியோகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங்கின் முன்ஜாமீன் மனுவை ஜார்கண்ட் மாநில தியோகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிஹார் மாநில பாஜக மூத்த தலைவரான கிரிராஜ் சிங், நவேடா மக்களவைத் தொகுதி யில் போட்டியிடுகிறார். இந்நிலை யில் கடந்த 18-ம் தேதி ஜார்க் கண்ட் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த அவர், “பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் அனுதாபிகள், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அவரது பேச்சுக்கு பாஜக தலைமையும் அதிருப்தி தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்ட மோடி, பொறுப்பற்ற விமர்சனங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் கிரிராஜ் சிங்கின் பேச்சு தொடர்பாக தியோகார், போகாரா, பாட்னா ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த மூன்று வழக்குகளில் பாட்னா வழக்கில் மட்டும் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் அவரது சார்பில் போகாரா முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தியோகர் நீதிமன்றம் கிரிராஜ்சிங் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x