Published : 24 Oct 2020 09:25 PM
Last Updated : 24 Oct 2020 09:25 PM
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் ட்விட்டரில் பதிவிட் கருத்தில், “கரோனா லாக்டவுன் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். என்னுடைய பணியை நிறுத்திக்கொண்டு சிறிய இடைவெளி கொடு எனக் கடவுள் விரும்புகிறார். பரிசோதனை செய்து கொண்டதில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
மருத்துவர்கள் ஆலோசனையின்படி, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் கவனமாக இருக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தல் பிரச்சாரம், கடந்த 19 முதல் 21-ம் தேதிவரை மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்றது ஆகியவற்றை முடித்துக்கொண்டு தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பைக்குத் திரும்பினார்.
அப்போது இருந்து உடல்நலம் சரியில்லாமல் பட்னாவிஸ் இருந்தார். அவருடன் சென்ற பாஜக தலைவர்கள் சிலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, பட்னாவிஸும் பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று பட்னாவிஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT