Last Updated : 24 Oct, 2020 05:13 PM

 

Published : 24 Oct 2020 05:13 PM
Last Updated : 24 Oct 2020 05:13 PM

கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி: மத்திய அரசு அறிவிப்பு

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்று தவணையைச் செலுத்த முடியாமல் ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதன்படி ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு கடன் பெற்றோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை கடன் பெற்றிருந்தால் அவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்படாது.

அதேசமயம் கடன் ஒத்திவைப்புச் சலுகையைப் பெறாமல், கடன் தவணையைக் கரோனா காலத்திலும் முறையாக வட்டிக்கு வட்டித் தொகையைச் செலுத்தியவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் வட்டித்தொகை திரும்பச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சலுகை அளித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு ரூ.2 கோடிவரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்தது. இந்த வழக்கில் கடந்த 14-ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு அறிவித்த இந்த முடிவை மிக விரைவாக நடைமுறைப்படுத்தவும், சாமானிய மக்களின் தீபாவளிப் பண்டிகை மத்திய அரசின் கைகளில் இருக்கிறது என்றும் தெரிவித்தது.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச்சேவைப் பிரிவு நேற்று இரவு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி வங்கிகளில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு கரோனா காலத்தில் ஒத்திவைப்புச் சலுகையைப் பெற்றிருந்தால் அவர்கள் செலுத்தும் வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது. இந்தத் திட்டம் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தத் திட்டத்தில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு தவணை செலுத்தியவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் பொருட்கள் வாங்கி தவணை செலுத்துவோர், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் ரூ.2 கோடிவரை பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை பெறும் வங்கிக் கணக்கு உடையவர்களின் கணக்கு பிப்ரவரி 29-ம் தேதிவரை என்பிஏ அதாவது வாராக்கடன் வங்கிக் கணக்காக இருந்திருக்கக்கூடாது.

இந்தத் திட்டத்தில் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள், நபார்டு வங்கிகள், வீட்டு வசதி வங்கிகள், வீடு கட்ட கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கடன் பெற்றவர்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

கரோனா காலத்தில் அதாவது மார்ச் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடன் தவணையைக் கூட்டுவட்டியுடன் செலுத்தியவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்''.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x