Last Updated : 24 Oct, 2020 03:49 PM

 

Published : 24 Oct 2020 03:49 PM
Last Updated : 24 Oct 2020 03:49 PM

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி; சோனியா, ராகுல், பிரியங்கா கேள்வி கேட்கமாட்டார்களா?- 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி

பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஏன் மவுனமாகினர். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி நடந்தால் தெரியாதா என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் ஹாத்தரஸில் 19-வயது பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அங்கு செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்தபோது ராகுல் காந்தியை கீழே தள்ளி பெரும் பரபரப்பானது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆள்கிறது, அங்கு சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ஏன் ராகுல், பிரியங்கா செல்லவில்லை என்று பாஜக கேள்வி எழுப்புகிறது.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள தண்டா எனும் கிராமத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் புலம்பெயர்ந்து வேலை செய்து வந்தனர். அவர்களின் 6 வயது மகளை சிலர் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தை கையில் எடுத்து பாஜக, காங்கிரஸை சாடிய வருகிறது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 6 வயது மகள் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி நடந்தால் செல்லும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தங்கள் கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு அநீதி நடந்தால் அவர்களுக்கு அது தெரியாதா.

ஹோசியார்பூர் தண்டா கிராமத்தில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியாக இருக்கிறது. பஞ்சாப் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியல் சுற்றுலா செல்வதற்கு பதிலாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தண்டா கிராமத்துக்கும், ராஜஸ்தானுக்கும் சென்று பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து பேச வேண்டும்.

தண்டா கிராமத்துக்கு இதுவரை சோனியா காந்தி, பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை. தங்களின் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்பட்டால், அது சோனியா குடும்பத்தினர் கண்களுக்குத் தெரியாதா.

ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸுக்கு மட்டும் சென்றுபாதிக்கப்பட்ட குடும்பத்தினரச் சந்தித்துஆறுதல் தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு எதிராக, பிஹார் மாநிலப் பெண்ணுக்கு எதிராகக் குற்றம் இழைக்கும் கட்சிக்கு ஆதரவாக பிஹார் மாநிலத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம் செய்து வருகிறார். எப்படி உங்களால் முடிகிறது”

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது தவிர ஹோசியார்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்ைக எடுத்து குற்றவாளிகளைக்கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 3 நாட்களில் விசாரணை நிலவரம் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த பலாத்காரக் கொலை தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தஇருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x