Published : 24 Oct 2020 07:17 AM
Last Updated : 24 Oct 2020 07:17 AM

நாட்டின் முதல் கரோனா தடுப்பு மருந்து 60 சதவீதம் செயல் திறன் கொண்டது: பாரத் பயோடெக் நிறுவன செயல் இயக்குநர் தகவல்

நாட்டின் முதல் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் குறைந்தது 60% செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நம் நாட்டின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சிலுடன் சேர்ந்து ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உரு வாக்கி உள்ளது.

தற்போது இதன் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. 3-வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த 2-ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் கூறும்போது, “பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள நாட்டின் முதல் கோவிட் -19 தடுப்பூசி குறைந்தது 60% செயல் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போது 3-வது கட்ட பரி சோதனையை பெரிய அளவில் நடத்தவுள்ளோம். இதன் முடிவு கள் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் கிடைக்கும்.

தடுப்பு மருந்துகள் 50 சதவீதம் பயன் உள்ளதாக இருந்தாலே, அந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு, அமெரிக்காவின் உணவுமற்றும் தர நிர்வாக அமைப்பான யுஎஸ்எப்டிஏ ஆகியவை அங்கீகரிக்கின்றன.

எங்கள் நிறுவனம் ஆண்டு தோறும் 15 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்தின் விலை இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தயாரிப்பு மேம்பாட்டுப் பணிகள் முடியாததால் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. 3-வது கட்டபரிசோதனைக்காக ரூ.150 கோடியை அடுத்த 6 மாதங்களில் செலவிடவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x