Last Updated : 23 Oct, 2020 11:45 AM

 

Published : 23 Oct 2020 11:45 AM
Last Updated : 23 Oct 2020 11:45 AM

மிசோரம் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவர் கும்மணம் ராஜசேகரன் உள்பட 8 பேர் மீது மோசடி வழக்கு: கேரள போலீஸார் நடவடிக்கை

மிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் : கோப்புப்படம்

பத்தினம்திட்டா

மிசோரம் மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான கும்மணம் ராஜசேகரன் உள்பட 8 பேர் மீது மோசடி வழக்கை கேரள போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவின் ஆரண்முலாவில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரிகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் ஐபிசி பிரிவு 406 (நம்பிக்கைமோசடி), 420(மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் கும்மணம் ராஜசேகரன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கும்மணம் ராஜசேகர் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

போலீஸில் புகார் அளித்த ஹரிகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் “ கடந்த 2018 அக்டோபர் முதல் ஜனவரி 2020ம் ஆண்டுவரை பல்வேறு தருணங்களில் என்னிடம் ரூ.30 லட்சம் கும்மணம் ராஜசேகரன் உள்ளிட்ட 8 பேர் என்னிடம் பெற்றனர். பாலக்காடு மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடில்லா பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் என்னை பங்குதாரராகச் சேர்ப்பதாகக் கூறி இந்த பணத்தை என்னிடம் பெற்றார்கள்.

இதில் ராஜசேகரின் உதவியாளர் பிரவீண், கொல்லங்கோட்டைச் சேர்ந்த விஜயன் ஆகியோர் என்னிடம் பணம் பெற்று நிறுவனத்தில் சேர்ப்பதாகத் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தில் பங்குதாரராகச் சேரந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று என்னிடம் கும்மணம் ராஜசேகரன் கூறினார்.

இதுதொடர்பாக பல முறை ராஜசேகரனிடம் நான் ஆலோசனை நடத்தி அவரின் அறிவுரையின்படிதான் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன். மிசாோரம் ஆளுநராக ராஜசேகரன் இருந்தபோது அவர் சபரிமலைக்கும், ஆரண்முலாவுக்கும் வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினேன்” எனத் தெரிவித்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த வழக்கு குறித்து கும்மணம் ராஜசேகரன் கூறுகையில் “ ஹரிகிருஷ்ணன் கூறுவதுபோல் நான் அவரிடம் முதலீடு செய்வது குறித்து ஏதும் பேசவில்லை. பிரவீண் என்னிடம் உதவியாளராக இருந்தவர். ஆனால், பிரவீண் இதில் தொடர்பு இருப்பது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அரசியல்ரீதியாக பழிவாங்கும் வகையில் போடப்பட்ட வழக்கு” எனத் தெரிவித்தார்

இதற்கு பதில் அளித்து முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ ராஜசேகரன் கூறுவதுபோல் அரசியல்ரீதியாக காழ்புணர்ச்சியால் போடப்பட்டவழக்கு அல்ல. கேரள மாநிலம் ஒருபோதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் யார்மீதும் வழக்கு தொடராது, அரசியல்ரீதியாக பழிவாங்குவது எங்கள் நிலைப்பாடும் அல்ல. குற்றச்சாட்டு, ஆதாரங்கள் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x