

விவசாயிகளுக்கான மற்றொரு புதிய கிசான் ரயில் 242 டன் பழங்கள், காய்கறிகளுடன் ஆந்திராவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது என்று ரயில்வே துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் விவசாயிகள் பயனடையும் பொருட்டு, இந்த ஆண்டு ஆகஸ்ட மாதம், முதல் கிசான் ரயிலை (Kisan Rail) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 7 அன்று முதல் கிசான் ரயில் சேவை மகாராஷ்டிரா மற்றும் பிஹார் இடையே இயக்கியது. இதன்மூலம் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுக்கு நேரடி சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
தற்போது இரண்டாவதாக மற்றொரு கிசான் ரயிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை புதிய கிசான் ரயில் 242 டன் பழங்கள், காய்கறிகளுடன் ஆந்திராவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவில், ''புதிய கிசான் ரயில் ஆந்திராவின் அனந்தபூரிலிருந்து டெல்லிக்கு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முன்னதாக ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் குமார் யாதவ் கூறுகையில், ''இந்திய ரயில்வே கிசான் ரயிலை இயக்கி வருகிறது,
மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை ரயில் மூலம் கொண்டு செல்வதற்கு இந்திய அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்கியுள்ளது, இதன் கீழ் அவர்கள் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பெறுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.