Published : 23 Oct 2020 06:10 AM
Last Updated : 23 Oct 2020 06:10 AM
இமயமலையில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட மகாராஷ்டிராவை சேர்ந்த 68 வயது மூதாட்டி, இதுவரை 2,200 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
ஜம்மு பகுதியில் கத்ரா நகருக்கு அருகில் இமயமலையில் 5,200 அடி உயரத்தில் வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு குகைக் கோயில் ஆகும். உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டம், காம்கோன் பகுதியை சேர்ந்தவர் ரேகா தேவ்பங்கர். 68 வயதாகும் இவர், வைஷ்ணவி தேவி மீது அதீத பக்தி கொண்டவர். கடந்த ஜூலை 24-ம் தேதி ரேகா சைக்கிளில் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டார். நாள்தோறும் 40 கி.மீ. கடந்து இதுவரை 2,200 கி.மீ. தொலைவை அவர் கடந்துள்ளார். அவர் சைக்களில் செல்லும் வீடியோ வைரலானது.
தள்ளாத வயதிலும் ரேகா தளராமல் சைக்கிள் ஓட்டிச் செல்வதை பார்த்த ட்விட்டர் பயனாளர் ரத்தன் ஷர்தா, அவரை சந்தித்து நலம் விசாரித்தார். "வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சென்று கொண்டிருக்கிறேன்" என்று அப்போது ரேகா கூறினார். இதை வீடியோவாக பதிவு செய்த ரத்தன் ஷர்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT