

விவசாயிகளின் வேதனையை மத்திய அரசு புரிந்து கொள்ள வில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது:
விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. புதிய வேளாண் சட்டத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை கூட கிடைக்காது என்று கூறி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்று மத்திய அரசும் பாஜகவும் கூறிவந்தன. விவசாயிகளின் வலியையும் அவர்களின் வேதனையையும் மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை.
உத்தரபிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடகுறைவான விலைக்கு விளைபொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் நெல்லுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,868 ஆக இருந்தபோதும் ரூ.1,000 முதல் 1,100 வரை விற்க வேண்டிய நிலையில்தான் விவசாயிகள் இருக்கின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் என்று இருக்கும்போதே இந்த நிலை உள்ளது. புதிய சட்டத்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். மத்திய அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவே உள்ளது. இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.