Last Updated : 21 Oct, 2020 01:48 PM

 

Published : 21 Oct 2020 01:48 PM
Last Updated : 21 Oct 2020 01:48 PM

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்தும்?- உமர் அப்துல்லா கேள்வி

எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு , ஊழல் தடுப்புப் பிரிவைப் பாஜக அரசு பயன்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் கடந்த 2002 முதல் 2011-ம் ஆண்டுவரை பிசிசிஐ அமைப்பு வழங்கிய நிதியில் ரூ.43 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு இன்று காலை 84 வயதான பரூக் அப்துல்லா நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு நேரில் விசாரணை நடத்துவதற்கு அதிருப்தி தெரிவித்து அவரின் மகனும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில், “இன்று என் தந்தைக்கு 84-வது பிறந்த நாள். எதிர்க்கட்சியினரை மிரட்டவும், குரலை ஒடுக்கவும் எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு, ஊழல்தடுப்பு அமைப்புகளைப் பாஜக அரசு பயன்படுத்தும். உங்களின் சதித்திட்டம் என்ன என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். யாரேனும் மத்திய அரசுக்கு எதிராகப் பேசினால், துணிச்சலாக பிரிவினைவாத அரசியலை எதிர்த்தால் அவர்கள் வேட்டையாடப்பட்டு, சம்மன் அனுப்பி வைக்கப்படும்” என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இம்ரான் தாஹிர் தார் கூறுகையில், “அமலாக்கப் பிரிவின் சம்மன் என்பது திட்டமிட்ட வன்மமான நடவடிக்கை. ஜம்மு காஷ்மீரில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டும் பரூக் அப்துல்லாவின் முயற்சிக்கு எதிராகவே அமலாக்கப் பிரிவு அவருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறது. கடந்த 6 மணி நேரமாக 84 வயதான எம்.பி.யிடம் விசாரணை நடத்திவிட்டு எதை மறந்துவிட்டு, இன்று மீண்டும் விசாரணை நடத்த அவரை அழைத்துள்ளார்கள். சட்டத்தை மதித்து நடக்கும் பரூக் அப்துல்லா, அவரின் உடல்நிலையை அமலாக்கப் பிரிவு கருத்தில் கொள்ளவில்லை.

இன்றுள்ள சூழலில் வழக்கிலிருந்து நாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்க பாஜகவிடம் பணிந்து செல்ல வேண்டும் அல்லது பாஜகவில் இணைந்துவிட வேண்டும். அசாம் முதல் கர்நாடகா வரை, மேற்கு வங்கம் முதல் ஆந்திரா வரை இதைத்தான் பார்த்துள்ளோம். பரூக் அப்துல்லா ஒருபோதும் பாஜகவிடம் பணிந்து செல்லமாட்டார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x