Last Updated : 21 Oct, 2020 12:34 PM

 

Published : 21 Oct 2020 12:34 PM
Last Updated : 21 Oct 2020 12:34 PM

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன் பரூக் அப்துல்லா விசாரணைக்கு நேரில் ஆஜர்

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, அமலாக்கப் பிரிவு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.

83 வயதான பரூக் அப்துல்லாவிடம் கடந்த 19-ம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்குத் தொடர்பாக ஏறக்குறைய 6 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த வாரம் 3 தலைவர்களும் சேர்ந்து ஆலோசனை நடத்தி, குப்கர் தீர்மானத்தின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக பரூக் அப்துல்லா இருந்தபோது, கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) ஜம்மு காஷ்மீர் மாநிலக் கிரிக்கெட் அமைப்புக்கு வழங்கிய நிதியில் ரூ.43.69 கோடி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச் செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஸன் அகமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அகமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிபிஐ முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த 2005-2006 முதல் 2011 -2012 வரை பிசிசிஐ அமைப்பிடம் 3 விதமான வங்கிக் கணக்கில் ரூ.94.06 கோடியை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பு பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பணம் கணக்கில் கொண்டு வரப்படவில்லை.

இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரூக் அப்துல்லாவிடம் சண்டிகரில் வைத்து விசாரணை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் ஊழல் நடந்தபோது அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லாதான் இருந்தார். அவருக்குத் தெரியாமல் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவருக்குப் பங்கு இருக்கக்கூடும் என்றும் அமலாக்கப் பிரிவு நம்புகிறது.

அந்த அடிப்படையில்தான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணையில் பரூக் அப்துல்லா அளிக்கும் வாக்கு மூலம் அனைத்தும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் எடுக்கப்படும் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணை குறித்து பரூக் அப்துல்லா கூறுகையில், “அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். எனக்குப் பயமில்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக் பகுதியில் அமைந்திருக்கும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் இன்று காலை பரூக் அப்துல்லா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x