Published : 20 Oct 2020 10:22 PM
Last Updated : 20 Oct 2020 10:22 PM

கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய முழுமையான உரை

கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம் என குடிமக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். முடக்கநிலைகள் நீங்கியிருக்கலாம், ஆனால் வைரஸ் போகவில்லை, அலட்சியமாக இருப்பதற்கான காலம் இதுவல்ல என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்கள் தங்கள் தீவிர முனைப்பை கைவிட்டுவிடக் கூடாது என்றும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

முடக்கநிலை நீக்கப்பட்டு விட்டாலும், கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம் கிடையாது என்று நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

நாடு முழுக்க கரோனா சிகிச்சை நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து பாராட்டு தெரிவித்த அவர், பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், தங்கள் கடமைகளை ஆற்ற மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்லத் தொடங்கிவிட்டார்கள் என்றும் கூறினார்.

திருவிழாக்கள் வருவதால், சந்தைகளும் கூட இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 7 - 8 மாதங்களில் ஒவ்வொரு இந்தியரும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இந்தியா இப்போது நல்ல நிலையில் உள்ளது என்று கூறிய அவர், இந்த சூழ்நிலை கெட்டுப் போக அனுமதித்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறும் விகிதம் அதிகரித்துள்ளது, மரணம் அடைவோரின் விகிதம் குறைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 10 லட்சம் பேரில் 5500 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக அவர் கூறினார். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 10 லட்சம் குடிமக்களுக்கு 83 என்ற எண்ணிக்கையில் மரண விகிதம் உள்ளதாகவும், அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை சுமார் 600 என உள்ளதாகவும் தெரிவித்தார்.

வளர்ச்சி அடைந்த பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக வெளியான ஒப்பீடுகளை அவர் பாராட்டினார்.

நாட்டில் கோவிட் பாதிப்புக்கு எதிரான சிகிச்சைக்குத் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டிருப்பதை பிரதமர் பட்டியலிட்டார். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 90 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன என்றும், 12 ஆயிரம் தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுக்க கரோனா பரிசோதனை செய்த 2000-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் 10 கோடி பரிசோதனைகளைக் கடந்துவிடுவோம் என்றும் பிரதமர் கூறினார்.

வசதி படைத்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்களின் உயிரை இந்தியா வெற்றிகரமாகக் காப்பாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவிட் பெருந்தொற்று நோய்க்கு எதிரான செயல்பாட்டுக்கு பலம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

``சேவா பர்மோ தர்மா'' என்ற மந்திரத்தைப் பின்பற்றி தன்னலமற்ற சேவைகள் செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அலுவலர்களின் பணிகளை பிரதமர் பாராட்டினார்.

இவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ள நிலையில், மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். கரோனா வைரஸ் போய்விட்டது என்றோ, இனிமேலும் கொரோனாவால் அபாயம் நேராது என்றோ நினைத்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

சமீப காலமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ``நீங்கள் அலட்சியமாக இருந்து, முகக்கவச உறை இல்லாமல் வெளியில் சென்றால், நீங்களே உங்களை, உங்கள் குடும்பத்தை, குழந்தைகளை, முதியவர்களை நோய்த் தாக்குதலுக்கு ஆட்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதாக அர்த்தம்'' என்றார் அவர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறையத் தொடங்கி, பிறகு திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டி பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறையும் வரையில் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்குப் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப் படுகின்றன என்றும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நமது விஞ்ஞானிகளும், பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

கரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, சில ஆய்வுகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளன என்று பிரதமர் கூறினார்.

தடுப்பு மருந்து கிடைத்தவுடன், குடிமக்கள் ஒவ்வொருவருக்ரும் அதை அளிப்பதற்கான, விரிவான திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடும் வரையில் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

நாம் சிரமமான காலக்கட்டத்தில் இருக்கிறோம், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் பெரிய நெருக்கடி ஏற்பட்டு, நமது மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தங்கள் கடமைகளைச் செய்யும்போது குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஆறு அடி இடைவெளி பராமரித்தல், அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல், முகக்கவச உறை அணிதல் ஆகிய செயல்பாடுகளை தொடர்ந்து செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x