Published : 20 Oct 2020 06:20 PM
Last Updated : 20 Oct 2020 06:20 PM

‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’- பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது உரையாற்றி வருகிறார்.

தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் பண்டிகைகாலம் போன்றவற்றால் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அவர் மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா மிக நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. பெரிய போராட்டத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தைரியத்துடன் மக்கள் தங்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றனர்.

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பல நாடுகளில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதனை கொண்டு வரும் முயற்சியில் உலக நாடுகளுடன் இந்தியாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும். அவ்வாறு மருந்து கிடைக்கும் போது அதனை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையையும் நாம் தொடங்கியுள்ளோம்.

எனவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பண்டிகைக்காலம் நெருங்குவதால் கரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிறிய கவனக்குறையும் பெரிய பாதிப்பை உண்டாக்கி விடக்கூடும். எனவே மக்கள் கவனத்துடன் வரும் காலங்களில் இருக்க வேண்டும். அடுத்த சில மாதங்களையும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

அதுமட்டுமின்றி குளிர்காலமும் வர இருப்பதால் அதிககவனம் வேண்டும். நவராத்திரி, தீபாவளி என பல பண்டிகைகள் வருகின்றன. எனவே இந்த காலத்தில் எச்சரிக்கை தேவை.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன். இந்த பண்டிகை காலம் உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x