Published : 19 Oct 2020 06:48 PM
Last Updated : 19 Oct 2020 06:48 PM
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவே குடியுரிமமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பல்வேறு மாநிலங்களில் போராட்டம், கலவரம் வெடித்தது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தினர். கரோனா காரணமாக அந்தப் போராட்டம் விலகியது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிஏஏ குறித்து மவுனமாக இருந்த மத்திய அரசு, அதை நடைமுறைப்படுத்தும் பணிகளைத் தொடங்கி உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்றுள்ளார். அங்குள்ள ஆனந்தமாயி காளி கோயிலில் நட்டா வழிபாடு செய்தார்.
அதன்பின் பாஜக தொண்டர்கள் மத்தியில் ஜே.பி.நட்டா பேசியதாவது:
“மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு பிரிவினை, வகுப்புவாத அரசியலை நடத்துகிறது. அரசியல் நலன் பார்த்து மக்களுக்குச் சேவை செய்கிறது. ஆனால், பாஜக அனைத்து மக்களுக்கும் சேர்த்துப் பணியாற்றுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் அனைவரும் பயன்பெறுவார்கள். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை நடைமுறைப்படுத்த உறுதியாக இருக்கிறோம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது சூழல் முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆதலால் சிஏஏவை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறோம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் வன்முறை, கமிஷன் போன்றவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்''.
இவ்வாறு நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT