Published : 19 Oct 2020 05:31 PM
Last Updated : 19 Oct 2020 05:31 PM

ஹைதராபாத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு ரூ.10 ஆயிரம்: சந்திரசேகர் ராவ் முடிவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கொட்டித் தீர்த்த அதிகனமழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 117 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வெள்ளம் சூழ்ந்தது.

ஏராளமான மக்கள் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு மாநிலங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கனமழையால் உயிரிழந்துள்ளனர்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும் இடைவிடாது அதி கனமழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரில் சுமார் 1,500 குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.

கன மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹைதராபாத் நகருக்கு வெளியே பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சில இடங்களில் பேருந்துகள், லாரிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.

சாலை, தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு வீரர்கள், போலீஸார் உள்ளிட்டோர் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடு
பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகள் செய்து தரப் பட்டுள்ளன.

நகரில் ஒரேநாளில் 32 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த 3 நாட்களில் 119 செ.மீ. மழை பெய்துள்ளது. ஹைதராபாத்தில் 1903-ம் ஆண்டு இதேபோன்று பலத்த மழை பெய்ததாக கூறப்படுகிறது. 117 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள சேதம், மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது:

‘‘ஹைதராபாத்தில் இவ்வளவு கனமழை 100 ஆண்டுகளில் பெய்தது இல்லை. இதனால் ஹைதராபாத் நகரமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம். ஒரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x