Published : 19 Oct 2020 02:34 PM
Last Updated : 19 Oct 2020 02:34 PM

விசாரணை அமைப்பு கைது செய்யும் முன் பினராயி விஜயன் பதவி விலகுவது நல்லது; நீண்ட காலத்துக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்ட முடியாது: ரமேஷ் சென்னிதலா சாடல்

கேரள முதல்வர் பினராயி விஜயனும், தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரும் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். நீண்ட காலத்துக்கு பினராயி விஜயன் தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த ஜூன் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர்.

பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சரித் குமார் அளித்த தகவலின்படி, ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர். கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விற்பனை மேலாளராக இருந்தபோதுதான் இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினார்.

ஸ்ப்னா சுரேஷுக்கும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவசங்கரிடம் பலமுறை என்ஐஏ அமைப்பினரும், சங்கத்துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் விசாரணை நடத்தியுள்ளனர். எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தால், உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வரும் 23-ம்தேதி வரை சிவசங்கரைக் கைது செய்ய அமலாக்கப் பிரிவுக்குத் தடை விதித்துள்ளது. இதற்கிடையே நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் கடந்த இரு நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.

இந்தச் சூழலில் கோழிக்கோடு நகரில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கேரள முதல்வர் பினராயி விஜயனும், தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கரும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்கிறார்கள்.

தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் சிவசங்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்ததாக நாடகமாடுகிறார். அரசு வழிகள் மூலம் கைது நடவடிக்கையைத் தாமதப்படுத்த மட்டுமே சிவசங்கரால் முடியும். கைதைத் தடுக்க முடியாது.

முதல்வர் பினராயி விஜயனும் நீண்டகாலத்துக்கு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். விசாரணை அமைப்புகளின் விசாரணை நேர்மையாக, சரியான திசையில் செல்கிறது என்று நம்புகிறேன். விசாரணை அமைப்புகள் பினராயி விஜயனைக் கைது செய்வதற்கு முன், முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகுவது நல்லது.

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர்

கேரள அரசின் ஊழல் நடவடிக்கை, தீங்கு விளைவிக்கும் செயல்களைப் பார்த்து மக்கள் கோபத்தில் உள்ளனர். மாநில அரசின் போலித்தனத்தை வெளிக்காட்டு்ம் வகையில் வரும் நவம்பர் 1-ம் தேதி 20 ஆயிரம் மையங்களில் 2 லட்சம் தொண்டர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

கேரள காங்கிரஸ் மாணி தொடர்பான கேரள மதுபார் வழக்கில் நான் முக்கியச் சதியாள் எனும் குற்றச்சாட்டு பொய்யானது. அதை நான் மறுக்கிறேன்''.

இவ்வாறு சென்னிதலா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x