Published : 19 Oct 2020 12:14 PM
Last Updated : 19 Oct 2020 12:14 PM

ரயில், விமானங்களில் கிருமிநீக்கம் செய்யும் சானிடைசர் கையுறைகள்: விசாகப்பட்டினம் மாணவி தயாரிப்பு

ஆட்டோ சானிடைசர் கையுறைகளுடன் ஹேமாஞ்சனி.

விசாகப்பட்டினம்

ரயில், விமானங்களில் கைபடும் மேற்பரப்புகளைக் கிருமி நீக்கம் செய்யும் சானிடைசர் கையுறைகளை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் புதிதாக வடிவமைத்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக கரோனா நோய்த்தொற்று பற்றிக்கொள்ளும் என்ற பயத்திலேயே ஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். முக்கிய வேலைகள் காரணமாகவோ தவறுதலாகவோ வெளியே செல்வோர், ‘கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ்’ பதுங்கியிருந்த எந்த மேற்பரப்பையும் தொட்டுவிட்டோமோ என்று அவர்கள் எப்போதும் கவலைப்படுகிறவர்களாக இருக்கிறார்கள்.

மார்ச் மாதத்தில் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்தே, தனது பள்ளி இறுதியாண்டை முடித்த பசகடா ஹேமாஞ்சனிக்கு இந்த எண்ணம்தான் தீராத கவலையாக இருந்தது.

கோவிட்-19 பாதிப்புகள் தொடங்கியதிலிருந்தே, பொருள்களையும் மேற்பரப்புகளையும் சிரமமின்றி கிருமிநீக்கம் செய்யக்கூடிய ‘ஆட்டோ சானிடைசர் கையுறைகளை’ உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் ஹேமாஞ்சனிக்கு உதிக்கத் தொடங்கியது. அவர் தான் கண்டுபிடிக்க விரும்பிய கிருமிநாசினி கையுறை குறித்த எண்ணங்களை தனது தந்தையுடன் பகிர்ந்துகொண்டார்.

பி.எம்.டி. ரயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் அவரது தந்தை பிரசாத், மகள் ஹேமாஞ்சனி முயற்சியை வரவேற்றதோடு, தனக்குத் தெரிந்த நிபுணத்துவத்தையும் அவருடன் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் சானிடைசர் கையுறைகளை ஹேமாஞ்சனி வடிவமைத்துள்ளார்.

தான் தயாரித்துள்ள சானிடைசர் கையுறை தயாரிப்புக்கான பொருள்கள், எப்படிச் செயல்படுகிறது போன்றவற்றைப் பற்றி அவர் கூறியதாவது:

"கையுறையின் உள் அடுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஆனது. வெளிப்புறம் உறிஞ்சும் மருந்து கலந்த மைக்ரோ நானோ பொருளால் ஆனது. இதில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கைகளில் கையுறை அணிந்துகொண்டபின் மேற்பரப்புககளில் நம் கைகளைப் பரப்ப வேண்டும். அப்போது தானாகவே கிருமி நீக்கம் செய்யப்பட்டுவிடும்.

நானோ பொருளில் உள்ள திரவ சானிடைசர் நாம் கை வைக்கும் பரப்புகளில் பரவி வைரஸைக் கொன்றுவிட்ட பிறகும் அந்த இடங்களில் இந்த வேதிப்பொருட்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இருக்கும். இதனால் அடுத்தடுத்த பயனர்களுக்குச் சில பாதுகாப்புகளை இது வழங்குகிறது.

பிளாஸ்டிக் உள் அடுக்கு நம் உள்ளங்கைகளையும் கைகளையும் சானிடைசரிலிருந்து பாதுகாக்கிறது. இது நீண்ட நேரம் பயன்படுத்தினால் நம் கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.

நாம் ஒரு அலுவலகத்திற்குள் அல்லது வேறு எந்த இடத்திலும் நுழைந்தவுடன் நாம் தொடக்கூடிய கதவு கைப்பிடிகள், கைப்பிடிகள், மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து மேற்பரப்புகளையும் நம் கைகள் பற்றும்போது இந்தக் கையுறைகள் கிருமி நீக்க வேலையைச் செய்கின்றன. அவை நடைமுறையில் பயன்படுத்தும்போது பயணிகளுக்கு, குறிப்பாக ரயில் மற்றும் விமானப் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எங்கள் தயாரிப்புக்கான காப்புரிமையை வழங்குவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள என்.ஆர்.டி.சியின் அறிவுசார் சொத்து வசதி மையத்திற்கு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம். செப்டம்பர் 14 அன்று அவர்கள் எங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்''.

இவ்வாறு மாணவி பசகுடா ஹேமாஞ்சனி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x