Published : 18 Oct 2020 05:36 PM
Last Updated : 18 Oct 2020 05:36 PM
உத்தவ் தாக்கரேவை விமர்சிக்க பாஜகவுக்கு எந்தவித தகுதியுமில்லை, முதலில் வெள்ளத்தில் பாதித்த விவசாயிகளுக்கு ஆதரவளியுங்கள் என்று மகாராஷடிரா முதல்வர் மீது குற்றச்சாட்டு வைத்த பாஜகவுக்கு சிவசேனா பதிலடி தந்துள்ளது.
மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவின் மேற்கு மாவட்டங்களில் கடும் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகின, ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாழும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசு மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில முதல்வர் பார்வையிடவில்லை என குற்றச்சாட்டு எழுப்பிவருகிறது.
இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய உரிய இழப்பீடுகள் வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளால் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை அவுரங்காபாத் மாவட்டத்தில் பைத்தானில் ஒரு நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர்களுடன் பேசிய நுகர்வோர் நலன், உணவு & பொது விநியோகத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் ராவ் சாகேப் தன்வே, ''முதல்வர் அதிகாரத்தில் இருப்பவர்கள், வெள்ளத்தில் பாதித்த மக்களைச் சந்திக்க வேண்டும், ஆனால் தொற்றுநோய் காரணமாக உத்தவ் தாக்கரே தனது வீட்டை விட்டு கூட வெளியேறவில்லை'' என்று கூறி விமர்சித்திருந்தார்,
தாக்கரேவை விமர்சித்த மத்திய இணை அமைச்சருக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன் கோட்கர் பதிலடி தந்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் கோட்கர் கூறியதாவது:
மாநிலத்தில் கடும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய தாக்கரே சோலாப்பூர் மற்றும் பர்பானி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்துவரும் முதல்வருக்கு எதிராக பேச பாஜக தலைவருக்கு எந்த உரிமையும் இல்லை. உத்தவ் தாக்கரே வீட்டில் உட்கார்ந்திருக்கவில்லை. அவர் சோலாப்பூர் மற்றும் பர்பானி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.
பாஜக தலைவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் விளையாடுவதை நிறுத்த வேண்டும். நெருக்கடியான இந்த நேரத்தில், பாஜக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக அரசியல் செய்கிறார்கள்"
இவ்வாறு சிவசேனாவின் மூத்த தலைவர் அர்ஜுன் கோட்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT