Published : 18 Oct 2020 11:32 AM
Last Updated : 18 Oct 2020 11:32 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61 ஆயிரத்து 871 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 74 லட்சத்து 94 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து ஆயிரத்து 24 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 88.03 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 83 ஆயிரத்து 311 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து 9-வது நாளாக கரோனா வைரஸால் சிகிச்சை பெற்றுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழும், முதல் முறையாக 7 லட்சத்துக்கும் கீழாகவும் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 1,033 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.52 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 463 பேரும், உத்தரகண்டில் 95 பேரும், கர்நாடகாவில் 71 பேரும், மேற்கு வங்கத்தில் 61 பேரும், தமிழகத்தில் 57 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 40 பேரும், டெல்லியில் 35 பேரும் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 9 கோடியே 42 லட்சத்து 24 ஆயிரத்து 190 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 70 ஆயிரத்து 173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 10-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT