Published : 18 Oct 2020 08:04 AM
Last Updated : 18 Oct 2020 08:04 AM
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு தசரா விழா மிக எளிமையாக கொண்டாடப்படுகிறது.
கி.பி.1610-ம் ஆண்டு முதல் மைசூரு மன்னர் குடும்பத்தின் சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு,10 நாட்கள் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதுகர்நாடக அரசின் விழாவாககோலாகலமாக கொண்டாடுப்படுகிறது. இதில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் லட்சக் கணக்கில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், “முதல்வர் எடியூரப்பா இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக தசராவிழா எளிமையாக கொண்டாடப்படும். எனவே பொதுமக்களும்பத்திரிகையாளர்களும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே காவலர்களும், சுகாதாரத் துறை பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் இதில் கவுரவிக்கப்படுவார்கள்'' என அறிவித்தார்.
இதன்படி 410-வது மைசூரு தசரா விழாவை நேற்று காலை 7.45 மணிக்கு ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குநர் மஞ்சுநாத், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் எஸ்.டி.சோமசேகர், பி.சி.பாட்டீல், மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகினி சிந்தூரி உட்பட 200 பேர் மட்டுமே பங்கேற்றனர். பொதுமக்கள் சாமுண்டி மலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தசரா நிகழ்ச்சிகள் அரசு தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு மைசூரு அரண்மனையில் முதல்வர் எடியூரப்பா தசரா கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர் மரிகம்மா, மருத்துவர் நவீன், செவிலியர் ருக்மணி, சுகாதாரத்துறை ஊழியர் நூர்ஜஹான், மைசூரு நகர காவலர் குமார், சமூக செயற்பாட்டாளர் அயூப் அகமது ஆகியோருக்கு எடியூரப்பா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இந்த ஆண்டு திரைப்படவிழா, மகளிர் விழா, தோட்டவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள்ரத்து செய்யப்பட்டுள்ளன. தசரா விழாவின் இறுதி நாளான 26-ம்தேதி நடைபெறும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் 5 யானை கள் மட்டுமே பங்கேற்க அனு மதிக்கப்பட்டுள்ளன. மன்னர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து நடத்தும் தனியார் தர்பாரில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட அனுமதிகிடையாது. தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை,சாமுண்டிமலை, அரசு கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT