Published : 17 Oct 2020 07:43 AM
Last Updated : 17 Oct 2020 07:43 AM

பிஹாரில் 12 பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி: நிதிஷ் குமாருக்கு ஆதரவு கோருகிறார்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 12 பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார்.

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்வரும் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வரும்23-ல் பிரச்சாரம் தொடங்குகிறார்.

அவரது முதல் பொதுக்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை சாசாராம் நகரில் நடைபெறுகிறது. அதே நாளில் கயா, பாகல்பூர் ஆகிய நகரங்களுக்கும் அவர் பயணம் செய்கிறார். பிஹாரில் பிரதமர் ஒரு நாளில் 3 பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவார் என்றும் இவற்றில் குறைந்தபட்சம் ஒரு கூட்டத்திலாவது பிரதமருடன் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொள்வார் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அக்டோபர் 28-ம் தேதி தர்பங்கா, முசாபர்பூர், பாட்னா ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். கடைசியாக நவம்பர் 3-ம் தேதி அரரியாவில் அவர் உரையாற்றுகிறார்.

பிஹாரில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் மேற்பார்வையிடுகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாருக்காக பிரதமர் மோடி வாக்கு கோருவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2013-ல்பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டபோது, அதை கடுமையாக எதிர்த்த நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். கடந்த பிஹார் தேர்தலில் லாலு மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் அவர் மெகா கூட்டணி அமைத்தார். இந்நிலையில் 2017-ல்அவர் மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x