திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடக்கம்: பெரிய சேஷ வாகனத்தில் அருள்பாலித்தார் மலையப்பர்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தசரா நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்றிரவு தொடங்கியது. பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாக்களை கோயிலுக்குள் ஏகாந்தமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக கோயிலுக்குள் நடைபெற்றது.

இந்நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. வரும் 24-ம் தேதிவரை நடைபெற உள்ள இவ்விழாவையும் ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வழக்கமாக மாட வீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் இப்போது கோயிலுக்குள் உள்ளசம்பங்கி மண்டபத்தில் நடத்தப்படுகிறது.

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் ஏழுமலையான் கோயிலில் ஆகமசாஸ்திரங்களின்படி அங்குரார்பன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் எழுந்தருளி பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வுசெய்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளினார். கோயில் முழுவதும் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

கோயிலின் ராஜகோபுரம் முற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசனம், விஐபி பிரேக் தரிசனம், ஆன்லைனில் கல்யாண உற்சவம்டிக்கெட் பெற்ற பக்தர்கள்,வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in