Last Updated : 16 Oct, 2020 06:11 PM

 

Published : 16 Oct 2020 06:11 PM
Last Updated : 16 Oct 2020 06:11 PM

2-ம் கட்டமாக 4 ரஃபேல் போர் விமானங்கள்: நவம்பரில் இந்தியா வருகின்றன

2-வது கட்டமாக 3 முதல் 4 ரஃபேல் போர் விமானங்கள் நவம்பர் முதல் வாரத்தில் ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்து சேரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணை இடைமறித்து தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அந்த விமானங்கள் முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ரஃபேல் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் 2-ம் கட்டமாக 3 முதல் 4 ரஃபேல் போர் விமானங்கள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவின் ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்து சேரும் என்று மத்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நவம்பர் முதல் வாரத்தில் 2-ம் கட்டமாக ரஃபேல் விமானங்கள் 3 அல்லது 4 எண்ணிக்கையில் இந்தியாவுக்கு வருகின்றன.

அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த விமானங்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டால், விமானப்படையில் 9 ரஃபேல் விமானங்கள்வரை சேர்க்கப்பட்டு பலம் அதிகரிக்கும். விமானப்படையின் துணை மார்ஷல் என்.திவாரி தற்போது பிரான்ஸில் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பிரான்ஸில் பயிற்சியில் இருக்கும் இந்திய விமானிகள் அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பயிற்சி அனைத்தும் முடிந்து நாடு திரும்பிவிடுவார்கள்.

நவம்பர் மாதத் தொடக்கத்தில் வரும் ரஃபேல் விமானங்கள் முதலில் அம்பாலாவுக்குத்தான் வருகின்றன. அதன்பின் ஆலோசனைக்குப்பின் மேற்கு வங்க மாநிலம், ஹசிம்மரா படைத்தளத்தில் நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x