Last Updated : 16 Oct, 2020 03:42 PM

 

Published : 16 Oct 2020 03:42 PM
Last Updated : 16 Oct 2020 03:42 PM

டெல்லி காற்று மாசு; விளைநிலங்களில் வைக்கோல் எரிப்பைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வடமாநிலங்களில் வயல்களில் அறுவடைக்குப்பின் மீதமுள்ள காய்ந்த வைக்கோல்களை எரிப்பதால் டெல்லியில் உருவாகும் காற்று மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோக்கூர் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வடமாநிலங்களில் வயல்களில் அறுவடை முடிந்தபின் விவசாயிகள் காய்ந்த வைக்கோல்களை எரித்து வருவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. குறிப்பாக ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலைத்தில் மீதமுள்ள வைக்கோல்களை எரிப்பதால் உருவாகும் புகை, டெல்லி முழுவதும் பரவுகிறது.

கடந்த ஆண்டு இந்த பிரச்சினை பெரும் விஸ்வரூபமெடுத்து, பனிக்காலத்தில் பெரும் பிரச்சினையானது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறைவிடப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூடி, மனிதர்கள் சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

அதேபோன்ற சூழல் டெல்லியில் வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்துவரும் குளிர்காலத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும்போதும், தொடர்ந்து வைக்கோல் புகை வந்தால் பெரும் சிக்கலாகிவிடும்.

இதையடுத்து, ஆதித்யநாத் துபே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்து, வயல்களில் வைக்கோலை விவசாயிகள் எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரினார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே, ஏ.எஸ். போபன்னா, வி ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். உத்தரவில் கூறியுள்ளதாவது:

ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விளைநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோக் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும். இந்த குழு வைக்கோல் எரிப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்.

ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோக்கூர்

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம், ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மதன்பி லோக்கூர் குழுவுக்கு தேவையான உதவிகளை வழங்கிட வேண்டும். மதன் பி லோக்கூர், நேரடியாக வயல்வெளிக்குச் சென்று பார்வையிடவும், விவசாயிகளிடம் பேசவும் தேவையான ஏற்பாடுகளையும், அவருக்கு முழுமையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

மதன் பி லோக்கூருக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், முழுமையான பாதுப்பை இந்த மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். தேவைப்பட்டால் என்சிசி, என்எஸ்எஸ் பிரிவினர் தேவையான உதவிகளை இந்த குழுவுக்கு உதவ வேண்டும்.

மதன் பி லோக்கூர் களநிலவரங்களை ஆய்வு செய்து தன்னுடைய அறிக்கையை 2 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x