Last Updated : 15 Oct, 2020 06:14 PM

 

Published : 15 Oct 2020 06:14 PM
Last Updated : 15 Oct 2020 06:14 PM

ராகுல் காந்தி காணொலி மூலம் பங்கேற்கும் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழா: வயநாடு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

வயநாடு

கேரள மாநிலம் வயநாட்டில் ஒரு பள்ளிக் கட்டிடத்தைக் காணொலி மூலம் திறக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று பங்கேற்க இருந்த நிலையில், முன் அனுமதி பெறாமல் நடத்தும் நிகழ்ச்சி என்று வயநாடு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். வயநாடு அருகே இருக்கும் முன்டேரி எனும் பகுதியில் அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கட்டிடம் கட்டப்பட்டு இருந்நது. அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது.

காணொலி மூலம் நடத்தப்படும் இந்த நிகழ்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், வயநாடு மாவட்ட நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி தரவில்லை என்பதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஐசி பாலகிருஷ்ணன் கூறுகையில், “வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி பள்ளிக் கட்டிடம் ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி காணொலி மூலம் இன்று நடக்க இருந்தது. இதற்கு முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்படும் செயலாகும். எம்எஸ்டிபி திட்டத்தின் கீழ் ரூ.1.2 கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் தலைவரும் கல்பேட்டா எம்எல்ஏவுமான சி.கே.சசீந்திரன் கூறுகையில், “எம்எஸ்டிபி திட்டம் என்பது மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற வீதத்தில் நிதியளித்துக் கட்டிடம் கட்டும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தைத் திறக்க முறைப்படி மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

முன் அனுமதி பெறாத காரணத்தால்தான் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, வேறு தேதியில் அனுமதி பெற்று நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கூறியது. என்னுடைய பெயரும் அழைப்பிதழில் இருந்தது. இருப்பினும் அனுமதி பெறாத நிகழ்ச்சியை நடத்தமுடியாது எனக் கூறி மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி நிகழ்ச்சியை நிறுத்த உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x