Last Updated : 15 Oct, 2020 03:59 PM

 

Published : 15 Oct 2020 03:59 PM
Last Updated : 15 Oct 2020 03:59 PM

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை வரும் 23-ம் தேதிவரை கைது செய்யத் தடை: அமலாக்கப்பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு சஸ்பெண்டில் இருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை வரும் 23-ம் தேதிவரை அமலாக்கப்பிரிவு கைது செய்யத் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த ஜூன் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர்.

பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சரித் குமார் அளித்த தகவலின்படி, ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

ஸ்ப்னா சுரேஷுக்கும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ்,சந்தீப் நாயர்

தங்கக் கடத்தில் வழக்கு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத்துறையினரும், என்ஐஏ அமைப்பினர், அமலாக்கப்பிரிவினர் பல முறை விசாரணை நடத்தி உள்ளனர்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக சிவசங்கரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தியபோது, அதில் அவர் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சார்பில் முன் ஜாமீன் மனு நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “ தான் பொறுப்புள்ள ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்கு முடிந்தவரை ஒத்துழைத்துள்ளேன்.

இந்த சூழலில் தன்னை கைது செய்யது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. தன்னைப்பற்றி தவறானத் தகவல்களை கூறி கைது செய்யப்படலாம் என்று செய்தி வெளியிடுகின்றன. ஆதலால், முன்ஜாமீன் வழங்கிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, “ வரும் 23-ம் தேதிவரை சிவசங்கரை கைது செய்யக்கூடாது. அவரின் முன்ஜாமீன் தொடர்பாக அமலாக்கப்பிரிவு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ தற்போதைக்கு சிவசங்கரை கைது செய்ய எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x