டிஆர்பி மோசடி; ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனு ஏற்க மறுப்பு: மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டிஆர்பி மோசடி; ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனு ஏற்க மறுப்பு: மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
2 min read

டிஆர்பி மோசடி விவகாரத்தில் மும்பை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குத் தொடர்பாக ரிபப்ளிக் சேனல் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. கரோனா காலத்தில்கூட தீவிரமாகப் பணியாற்றி உள்ளார்கள் என்று கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுப் பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக பிஏஆர்சி நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது.

இதையடுத்து, விசாரணை நடத்திய மும்பை போலீஸார் 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ரிபப்ளிக் சேனல் நிறுவனத்தின் நிர்வாகிகளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், மும்பை போலீஸார் அனுப்பிய இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ரிபப்ளிக் சேனல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மும்பை போலீஸார் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும்போது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1) ஏ பிரிவுக்கு விரோதமானது அல்ல. அதை மீறுவது எனக் கூற முடியாது. ஆதலால், அந்த மனுவை ரத்து செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரிபப்ளிக் சேனல் சார்பில் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

ரிபப்ளிக் சேனல் தரப்பில் மூத்த வழக்கரிஞர் ஹரிஸ் சால்வே ஆஜரானார். நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

நீதிபதிகள் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் மும்பை உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. ஆதலால், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள். மும்பை உயர் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

அதற்கு வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, மும்பை போலீஸார் நடத்தும் விசாரணையில் மனநிறைவு இல்லை என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “உயர் நீதிமன்றங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களின் மனுதாரர் அலுவலகம் மும்பையில்தான் இருக்கிறது. ஆதலால், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி முறையிடுங்கள். உயர் நீதிமன்றம் தலையீடாமல் விசாரிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே தனது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in