Last Updated : 15 Oct, 2020 10:53 AM

 

Published : 15 Oct 2020 10:53 AM
Last Updated : 15 Oct 2020 10:53 AM

உ.பி. முதல்வரை சந்திக்க முடியாமல் தலைமை செயலகத்திற்கு முன் தீக்குளித்த இளம்பெண் பலி: தற்கொலைக்கு தூண்டியதாக  காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க முடியவில்லை என அவரது அலுவலகம் முன்பாக தீக்குளித்த இளம்பெண் நேற்று இரவு பலியாகி உள்ளார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் ஆளுநரின் மகனான காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை செய்யப்படுகிறது.

உ.பி.யின் மஹராஜ்கன்ச்சை சேர்ந்தவர் அஞ்சலி திவாரி எனும் ஆயிஷா பேகம். இவருக்கு மணமாகி அக்கணவரிடம் இருந்து பல்வேறு காரணங்களால் பிரிந்து விட்டார்.

பிறகு இஸ்லாத்திற்கு மதம் மாறியவர் ஆஸிப் ராசா என்பவருடன் மணமாகாமலே இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். பிறகு அவரை இரண்டாவதாகவும் மணம் புரிந்துள்ளார் ஆயிஷா.

இதிடையே, சவுதி அரேபியாவில் வேலை கிடைத்தமையால் ஆஸிப் அவரை விட்டு கிளம்பி விட்டார். பிறகு அவர் தொடர்பு கொள்ளாமலும் இருந்தமையால் அப்பெண், ஆஸிப்பின் குடும்பத்தார் வீட்டில் தங்கத் துவங்கி உள்ளார்.

அங்கு ஆஸிப்பின் குடும்பத்தாரால் ஆயிஷாவிற்கு பல்வேறு வகை தொல்லைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஆயிஷாவை அடித்தும் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது.

இப்பிரச்சனையில் மஹராஜ்கன்ச் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் ஆயிஷா. இதை போலீஸார் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால், தனக்கு நியாயம் கேட்டு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க பலமுறை முயன்றுள்ளார் ஆயிஷா. இதற்கு அவருக்கு அனுமதி கிடைக்காமையால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக, உபி முதல்வர் யோகி அலுவலகம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று முன் தினம் காலை லக்னோவின் தலைமை செயலகம் வந்தவர் அதன் முன்பாக தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.

இதை அங்கிருந்த போலீஸார் தீயை அணைக்க முயல்வதற்குள் ஆயிஷாவின் உடல் முழுவதிலும் அது பரவியது. பிறகு ஆபத்தான நிலையில் ஆயிஷா லக்னோ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாகப் பலியாகி உள்ளார். இதன் மீது வழக்கு பதிவு செய்த லக்னோவின் ஹஸரத்கன்சின் காவல்நிலையப் போலீஸார் விசாரணையை துவக்கி இருந்தனர்.

இதில், உபி காங்கிரஸின் தலீத் பிரிவின் தலைவரான அலோக் பிரஸாத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர். மஹராஜ்கன்ச் மாவட்டக் காங்கிரஸின் தலீத் பிரிவின் தலைவரான இவர், ராஜஸ்தானின் முன்னாள் ஆளுநர் மறைந்த சுக்தேவ் பிரஸாத்தின் மகன் ஆவார்.

உபி காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த சுக்தேவ், மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகனான அலோக் பிரஸாத் மீது ஆயிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வழக்கில் மருத்துவமனையில் இருந்த ஆயிஷாவின் நினைவு திரும்பாமையால், அவரிடம் வாக்குமூலம் பெற இயலவில்லை. இவர் தீயிட்டுக் கொண்ட போதும் ஆயிஷாவை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததாக அலோக் மீது புகார் உள்ளது.

இந்நிலையில், அலோக் பிரஸாத் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்கு பதிவாவதாகக் கண்டித்து உபி மாநிலக் காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். உபி காங்கிரஸ் சார்பில் அலோக்கை விடுவிக்கக் கோரி ஒரு குழு, கூடுதல் உதவி காவல் ஆணையர் சிரஞ்சீவி நாத் சின்ஹாவையும் சந்தித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x