Published : 07 Sep 2015 09:05 AM
Last Updated : 07 Sep 2015 09:05 AM
டெல்லியில் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
டெல்லியின் பதர்பூரில் இருந்து ஹரியாணா மாநிலத்தின் பரீதாபாத் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக, விழா நடைபெறும் பரீதாபாத் சிவில் நீதிமன்ற மைதானத்துக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி ஜன்பத் ஸ்டேஷனில் இருந்து பரீதாபாத்தின் படா சவுக் ஸ்டேஷன் வரை அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அவருடன் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன தலைவர் மங்கு சிங் வந்தார்.
பிரதமரின் திடீர் ரயில் பயணத்தால் மெட்ரோ ரயில் அதிகாரிகளும் பயணிகளும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். பயணிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். சிலர் அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.
பயண முடிவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, வீரேந்திர சிங், ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
தற்போது 14 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் 2 ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தும் பணி 2017-ல் முடிவடையும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது விரிவாக்கப்பட்டுள்ள ரயில் சேவையால் தினமும் 2 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
ரயில் சேவை தொடக்க விழாவில் மோடி பேசும்போது, “டெல்லியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் ஹரியாணாவில் உள்ளன. புதிய ரயில் சேவை மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்குவதற்கு 2 மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. பூமி வெப்பம் அடைவதால் உலகம் கவலைப்படும் நேரத்தில் பசுமை இயக்கத்துக்கு டெல்லி மெட்ரோ தனது பங்களிப்பை செய்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT