Published : 15 Oct 2020 07:17 AM
Last Updated : 15 Oct 2020 07:17 AM

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தெலங்கானா தாசில்தார் சிறையில் தற்கொலை

தெலங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கினரா மண்டல தாசில்தார் நாகராஜு (54). இதே மண்டலத்தில் ராம்பல்லி எனும் இடத்தில் 54 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 28 ஏக்கர் நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கையகப்படுத்த திட்டமிட்டனர். ஆனால், இந்த 28 ஏக்கர் நிலத்தில் ஓய்வு பெற்ற கண்காணிப்பு அதிகாரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலமும் உள்ளது. அதை ஒரே பெயரில் மாற்றி அமைக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுப்பதாக ரியல் எஸ்டேட் வியாபாரிகள் தாசில்தார் நாகராஜுவிடம் கூறினர். இதில் ரூ.1.10 கோடி முன்பணமாக ஏ.என்.ராவ் நகரில் வசிக்கும் தாசில்தார் நாகராஜுவிடம் கொடுத்தனர்.

முன்னதாக இந்த தகவல் அறிந்து தாசில்தாரின் வீட்டின் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து லஞ்சப் பணம் ரூ.1.10 கோடியைக் கைப்பற்றினர். அதன்பின் தாசில்தார் நாகராஜு, ராம்பல்லி கிராம வருவாய் அதிகாரி சாய்ராஜ், ரியல் எஸ்டேட் தரகர் ஸ்ரீநாத், நில ஏஜென்ட் கன்னட அஞ்சி ரெட்டி ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் தாசில்தார் நாகராஜு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

லஞ்ச வழக்கில் பதவி பறிக்கப்பட்ட தாசில்தார் நாகராஜு, செஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை நாகராஜு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். லஞ்சம் வாங்கி, பதவி பறிபோய், நிலைமை தலைகீழாக மாறியதால்தான் நாகராஜு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x