Published : 15 Oct 2020 07:10 AM
Last Updated : 15 Oct 2020 07:10 AM

கரோனா ஊரடங்கு காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டி மீதான வட்டி சலுகையை நவ.2-க்குள் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி/ மும்பை

கரோனா ஊரடங்கு காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டி மீதான வட்டி ரத்து சலுகையை நவம்பர் 2-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த
அவகாசத்தை நீட்டிக்கக் கோரியும், கடன் களுக்கான வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கரோனா ஊரடங்கு சலுகையாக தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கும் குறைவான கடன் தொகைக்கு வட்டி மீதான வட்டி தொகையை அரசே ஏற்பதாக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சலுகைத் திட்டத்தை செயல்படுத்த நவ. 15-ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘சலுகை அளிப்பது என்று முடிவான பிறகு அதை காலம் தாழ்த்தி ஏன் வழங்க வேண்டும்.
நவம்பர் 2-ம் தேதிக்குள் இந்த சலுகையை வழங்க வேண்டும்’’ என காலக்கெடு நிர்ணயித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், நீதிபதி எம்.ஆர்.ஷா கூறும்போது, ‘‘இந்த தீபாவளிப் பண்டிகை மக்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக மாற வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கையில்தான் உள்ளது. அதற்கு இந்த சலுகையை செயல்படுத்துவது ஒன்றுதான் வழி’’ என்று குறிப்பிட்டார்.

சலுகை யாருக்கு பொருந்தும்?

மத்திய அரசு அறிவித்த கடன் சலுகையாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று வெளியான அறிவிப்பு வருமாறு:

தவணை தொகைகளை சரியாக செலுத்திய கடன் கணக்குகளுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்படும். 2020 மார்ச் 1-ம் தேதி வரையான கடன் நிலுவையில் அதிகபட்சம் 30 நாட்களுக்கும் மேலாக பாக்கிவைத்துள்ள கடன்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. இருப்பினும் இந்தக் கடன்கள் மீது சலுகை அளிப்பது, அதாவது மறுசீரமைப்பு செய்வது குறித்து பரிசீலிக் கப்பட்டு வருகிறது.
அந்த காலகட்டத்தில் நடைபெற்று வந்த திட்டப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன் தொகைக்கு, கரோனா ஊரடங்கு காலத்தில் தவணை செலுத்தப்படாமல் இருந்தாலும், அவற்றை மறுவரையறை செய்யலாம். சிறு, குறு மற்றும் நடுத்தர கடன் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகை தொடர்பாக ஜூன் 26-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறு வனங்கள் மார்ச் 1 வரையிலான கால கட்டத்தில் உள்ள கடனுக்கு மறுவரையறை செய்ய முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x