Published : 14 Oct 2020 07:46 AM
Last Updated : 14 Oct 2020 07:46 AM

ஆந்திராவில் திருமணத்துக்கு மறுத்ததால் காதலிக்கு தீ வைத்து கொன்ற காதலன்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விஸ்ஸண்ண பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் சின்னாரி (26). இவர், விஜயவாடா ஹனுமன் பேட்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் கரோனா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.

இவரும், ரெட்டிகூடம் பகுதியைச் சேர்ந்த நாகபூஷணம் என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நாகபூஷணத்தின் நடவடிக்கை சரியில்லாததால், அவரை கைவிட சின்னாரி முடிவு செய்தார். இதுகுறித்து பலமுறை நாகபூஷணத்திடம் கூறியும், அவர் தொடர்ந்து சின்னாரியின் பின்னால் வருவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதையடுத்து, நாகபூஷணம் மீது கடந்த 5-ம் தேதி விஜயவாடா காவல் நிலையத்தில் சின்னாரி புகார் அளித்தார். இதன்பேரில், நாகபூஷணத்தை போலீஸார் அழைத்து, இனி சின்னாரியின் பின்னால் சுற்றுவதோ, அவரை மிரட்டுவதோ கூடாது என எச்சரித்து அனுப்பிவிட்டனர்.

இதனால் மிகவும் ஆத்திரமடைந்த நாகபூஷணம், கடந்த திங்கட்கிழமை இரவு, சின்னாரி பணி முடிந்து வீடு திரும்பும் போது அவரை வழிமறித்தார். தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து, சின்னாரி மீது ஊற்றி நாகபூஷணம் தீ வைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத சின்னாரி, எரிந்தபடியே நாகபூஷணத்தை ஓட விடாதபடி கட்டிப்பிடித்தார். இதனால் இருவரும் தீயில் கருகினர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதற்குள் சின்னாரி பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார். நாகபூஷணம் 80 சதவீதம் எரிந்த நிலையில் குண்டூர் அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x