Published : 14 Oct 2020 07:45 AM
Last Updated : 14 Oct 2020 07:45 AM

`நிலுவை வழக்குகள் பற்றிய ஊடக விவாதம் நீதித் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும்’

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி ஊடகங்களில் விவாதிப்பது நீதிபதிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நீதித் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 3 முன்னாள் தலைமை நீதிபதிகள் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த 2009-ல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தனது கருத்துக்காக பூஷண் வருத்தம் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுபற்றி அக்டோபர் 13-ம் தேதி பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால், தனிப்பட்ட முறையில் ஆஜராகி தனது கருத்தை தெரிவித்தார். அவர், “நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி ஊடகங்களில் விவாதிப்பது, அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நீதித் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு வேணுகோபாலை கேட்டுக்கொண்டனர். மேலும் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x