Published : 14 Oct 2020 07:44 AM
Last Updated : 14 Oct 2020 07:44 AM

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்

கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டு தூதரக அலுவலகத்துக்கு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் முன்னாள் அதிகாரிகள் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் கடத்தல் தொடர்பாக என்.ஐ.ஏ, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியன தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கறுப்பு பணமோசடி தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் ஜாமீன் கோரி கொச்சி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஸ்வப்னா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்வப்னா சுரேஷுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில்தான் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்து கைது செய்தது. எனவே, அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் ஸ்வப்னா சுரேஷ் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x