ட்ரம்ப்பின் தீவிர ரசிகர் மாரடைப்பால் காலமானார்: தாய், தந்தையை இழந்து தவிக்கும் 7 வயது மகன்

ட்ரம்ப்புக்கு தனது வீட்டின் முன் 6 அடியில் சிலை வைத்து தினமும் வழிபட்டு வந்த  தீவிர ரசிகர் கிருஷ்ணா. (கோப்புப்படம்)
ட்ரம்ப்புக்கு தனது வீட்டின் முன் 6 அடியில் சிலை வைத்து தினமும் வழிபட்டு வந்த தீவிர ரசிகர் கிருஷ்ணா. (கோப்புப்படம்)
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டம், புச்சண்ண பேட்டை மண்டலம், கொண்ணா கிராமத்தை சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா (33). அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ரசிகர். ட்ரம்ப்புக்கு 6 அடி உயரத்தில் சிலை செய்து தனது வீட்டின் முன் வைத்துள்ளார்.

ட்ரம்ப்பின் கொள்கைகளால் தீவிர ரசிகரானேன் என கூறிவந்த கிருஷ்ணா, தனது பூஜையறையில் ட்ரம்பின் படத்தை வைத்திருந்தார். சிறிய அளவில் ட்ரம்ப்பின் சிலையை செய்து அதற்கு தினமும் பூஜைகளும் செய்து வந்தார். மேலும், ட்ரம்பின் புகைப்படம் போட்ட டி-ஷர்ட்டைதான் கிருஷ்ணா அடிக்கடி அணிவார். ட்ரம்ப்பின் தீவிர ரசிகரான இவரைஅப்பகுதியினர் ‘ட்ரம்ப் கிருஷ்ணா’ என்றே அழைத்து வந்தனர்.

கடந்த வாரம் ட்ரம்ப்புக்கு கரோனா தொற்று வந்ததை அறிந்த கிருஷ்ணா, அன்று முதல் சரிவர உண்ணாமல் சோகமாக காட்சியளித்தார். இதுகுறித்து கடந்த வாரம் ஒரு நிமிட வீடியோவை தனது மொபைல் போனில் அப்லோட் செய்து, அதனைதனது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அதில்,ட்ரம்ப் விரைவில் கரோனா பிடியிலிருந்து வெளி வரவேண்டுமென அவர் கோரியிருந்தார். தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்த கிருஷ்ணாவின் மனைவி, கடந்த ஆண்டு பிரசவத்தின் போது உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாரடைப்பு ஏற்பட்டு தனது வீட்டில் கிருஷ்ணா இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணாவின் இறுதி சடங்குகள் நேற்று சொந்த கிராமத்தில் நடந்தது. பெற்றோர் இறந்ததால் இவர்களின் 7 வயது மகன் நிராதரவாக அழுது கொண்டிருந்தது அனைவரையும் கண்கலங்க செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in