Last Updated : 12 Oct, 2020 02:12 PM

 

Published : 12 Oct 2020 02:12 PM
Last Updated : 12 Oct 2020 02:12 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்தப் பணத்தை மாதம் ரூ.1,000 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டின் பொருளாதாரத்தில் தேவையைத் தூண்டும் வகையிலும், நுகர்வோரின் செலவு செய்யும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது.

6-வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதாரச் சூழல் கருதி மீண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வட்டியில்லாமல் வழங்கப்படும்.

இந்த ரூ.10 ஆயிரம் என்பது ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31-ம் தேதி வரை செலவு செய்ய முடியும். இந்த ரூ.10 ஆயிரத்தை ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்குப் பிடித்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுகிறது''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கரோனாவுக்கு முன்பிருந்தே குறைந்து வந்தது. நுகர்வோர் செலவு செய்யும் அளவு குறைந்துவருகிறது, பொருளாதாரத்தில், பொருட்களின் தேவையின் அளவு குறைந்து வருகிறது. இதை உயர்த்த மத்திய அரசு அதிகமான வரிச்சலுகைகளை வழங்கிட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.

ஆனால், திடீரென கரோனா வைரஸ் தாக்கம் உருவாகி, அதைத் தொடக்கும் பொருட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வர்த்தகம், கடைகளில் வியாபாரம் பாதித்து, பொருளாதாரத்தில் தேவையின் பக்கம் அடிவாங்கியது. நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவு குறையத் தொடங்கியது.

இதையடுத்து, நுகர்வோர்கள் செலவு செய்யும் அளவை அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும் என்பதை அறிந்து மத்திய அரசு தற்போது பண்டிகை கால முன்பணத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x