Published : 12 Oct 2020 07:47 AM
Last Updated : 12 Oct 2020 07:47 AM

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: அசாமில் மேலும் 8 பேர் கைது ரூ.5.28 கோடி பறிமுதல்

அசாமில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அசாமில் 597 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்றது. ஆனால், இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்கள் மூலமாக கசிந்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த தேர்வு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக அசாம் தனிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அசாம் முன்னாள் டிஐஜி பி.கே. தத்தா, பாஜக நிர்வாகி தீபன் தேகா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவர் உட்பட 45 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில், அசாமில் உள்ள 4 மாவட்டங்களில் போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x